Saturday, July 11, 2009

இந்திய இராணுவ வாகனத் தாக்குதல், ஈழஆதரவுப் போராட்ட வழக்குகளுக்கான நிதி

ஈழத்தமிழர் படுகொலைக்கு எதிராக கடந்த ஓராண்டில் மட்டும் தமிழகம் முழுதும் பெ.தி.க வினர் நடத்திய பொதுக்கூட்டங்கள், பிரச்சாரப்பயணங்கள், ஆர்ப்பாட்டங்கள், முறையாக அறிவித்த மற்றும் அறிவிக்காத போராட்டங்கள் குறித்து முழுமையாகத் தொகுத்து இணையத்தில் பதிவு செய்யுங்கள் என இணைய நண்பர்கள் பலர் அடிக்கடி கேட்டுகொண்டதால் இயன்ற அளவு தோழர்களிடம் கேட்டு எழுதியுள்ளோம். விடுபட்ட நிகழ்வுகளை இதைப் படிக்கும் தோழர்கள் தெரிவித்தால் இணைத்துக்கொள்ளலாம். பெ.தி.க வின் செயல்பாடுகள், அதனால் தோழர்கள் அனுபவிக்கும் தொல்லைகள், அந்தத் தொல்லைகளைத் தீர்க்கும் வழிகள் என்ற வரிசையில் பதிவு செய்துள்ளோம்.
தமிழர்களைக் கொன்றுகுவிக்கும் இலங்கை இராணுவத்துக்கு இந்தியா ஆயுதங்கள் வழங்குவதை எதிர்த்தும், இந்திய இராணுவ உதவியை நிறுத்தக்கோரியும் தமிழ்நாடுமுழுவதும் கையெழுத்து இயக்கம் நடத்தி ஒரு கோடி கையெழுத்துக்களைப் பெற்று 2008 ஆண்டு பிப்ரவரி 6 ஆம் தேதி இந்தியத் தலைநகரான புதுடில்லியில் பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் பொதுச்செயலாளர்கள் கோவை இராமகிருட்டிணன், விடுதலை இராசேந்திரன், தலைமைக்குழு வழக்கறிஞர் துரைசாமி ஆகியோர் முன்னிலையில் மாபெரும் கண்டனப் பேரணி நடத்தி நாடாளுமன்றம் முன்பு ஆர்ப்பாட்டத்தை நடத்தி நிறைவில் பாதுகாப்பு அமைச்சர் அலுவலகத்தில் கையெழுத்துப் பிரதிகளை அளித்தோம். தமிழ்நாட்டிலிருந்து 1000 தோழர்கள் தனி இரயிலில் புதுடில்லி சென்று நடத்திய இந்த ஆர்ப்பாட்டம் தமிழ்நாட்டில் மீண்டும் 1980 களைப் போன்ற ஈழஎழுச்சியைத் தொடங்கி வைத்தது.
2008 மார்ச் 11 அன்று மாலை 5.30 மணியளவில் தமிழ்நாட்டில் குன்னூர் வெலிங்டனில் உள்ள இந்திய இராணுவ முகாமில் சிங்கள வெறிபிடித்த முக்கிய சிங்களத் தளபதிகள் ஆறுபேருக்கு சிறப்புப் பயிற்சிகள் அளிக்கப்படுவதைக் கண்டித்து பொதுச்செயலாளர் இராமகிருட்டிணன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 100 க்கும் மேற்பட்ட தோழர்கள் கைது செய்யப்பட்டனர்.
2008 அக்டோபர் 11கோவையில் பெரியார் திக வின் மாணவர் அமைப்பான தமிழ்நாடு மாணவர் கழகம் சார்பில் கல்லூரிகளில் இலங்கை அரசு இராணுவ உதவி செய்யும் இந்தியாவைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
2008 அக்டோபர் 13 இலங்கைக்கு உதவி வரும் இந்திய அரசைக் கண்டித்து திருப்பூரில் தலைமைச்செயற்குழு உறுப்பினர் இல.அங்கக்குமார் தலைமையில் மாவட்டத்தலைவர் துரைசாமி முன்னிலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.கோவையில் பொதுச்செயலாளர் கோவை இராமகிருட்டிணன் தலைமையில் இந்திய அரசைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்
2008 அக்டோபர் 14 கோவை. ஈரோடு. தூத்துக்குடி. திருச்செந்தூர் ஆகிய நகரங்களில் இலங்கைக்கு இராணுவ உதவி செய்யும் இந்தியாவைக் கண்டித்து பெ.தி.க சார்பில் கண்ட ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றது.ஈரோட்டில் இந்து ஆங்கில ஏடுகள் முழுவதும் அதிகாலை பேருந்து நிலையத்தில் வந்து இறங்கிய உடனேயே தீவைத்து கொளுத்தப்பட்டது. பெரியார் தி.க மாவட்டப் பொறுப்பாளர் குமரகுரு உட்பட இன உணர்வாளர்கள் கைது செய்யப்பட்டனர்.இந்து ஆங்கில ஏட்டின் கோவை அலுவலகம் தமிழ்நாடு மாணவர் கழக அமைப்பாளர் பன்னீர்செல்வம் தலைமையில் முற்றுகையிடப்பட்டது. அலுவலகம் தாக்கப்பட்டதாகவும். ஏடுகள் தீக்கிரையாக்கப்பட்டதாகவும் 10 தோழர்கள் கடும் சட்டப்பிரிவுகளில் கைது செய்யப்பட்டனர்.
2008 அக்டோபர் 22 தூத்துக்குடியில் தலைமைச் செயற்குழு உறுப்பினர் பால்.பிரபாகரன் தலைமையில் காயக்கட்டு ஆர்ப்பாட்டம்
2008 நவம்பர் 2, 9 விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்கக்கோரியும், தமிழ்ஈழத்தை அங்கீகரிக்கக்கோரியும் கோவை அருகே உள்ள சூலூரில் பொதுச்செயலாளர் கு.இராமகிருட்டிணன் தலைமையில் காயக்கட்டு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
09.11.2008 அன்று கோவை பெரியநாயக்கன் பாளையம் ஸ்ரீராம் திரையரங்கம் முன்பு காயக்கட்டு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
2008 நவம்பர் 3 இலங்கைக்கு உதவி செய்யும் இந்தியாவைக் கண்டித்து சேலம் மாவட்டம் கொளத்தூரில் ஒருநாள் கடைஅடைப்புப் போராட்டம்
2008 நவம்பர் 10 ஈழத்தமிழரைக் காக்கக்கோரி திண்டுக்கல்லில் அனைத்து முற்போக்கு அமைப்புகள், தொண்டுநிறுவனங்களை ஒருங்கிணைத்து சுமார் 5000 பேர் பங்கேற்ற மாபெரும் காயக்கட்டு ஊர்வலம் மாவட்டத்தலைவர் துரை.சம்பத் தலைiமையில் நடைபெற்றது.
2008 நவம்பர் 12 ஈரோட்டில் பெ.தி.க மாவட்டச் செயலாளர் இராம.இளங்கோவன் தலைமையில் இராஜபக்ஷே கொடும்பாவியை பாடைகட்டி இழுத்துச் சென்ற 150 தோழர்கள் கைது.
2008 நவம்பர் 14
ஈழத்தமிழர்களைக் காப்பாற்றக்கோரி ஏற்காட்டில் 67 மலைகிராமங்களைச் சேர்ந்த சுமார் 2000 பொதுமக்களை ஒன்று திரட்டி மாபெரும் கண்டனப் பேரணி.ஈழத்தமிழர் படுகொலையைத் தடுத்து நிறுத்தக் கோரி புதுச்சேரியில் மாநிலத் தலைவர் லோகு.அய்யப்பன் தலைமையில் மாநிலம் முழுவதும் தொடர் பரப்புரைப் பயணம்
2008 நவம்பர் 25 சேலத்தில் ஈழத்தமிழர் படுகொலையைக் கண்டித்து அனைத்துக்கட்சி கண்டனப் பேரணி ஆர்ப்பாட்டத்தை பெ.தி.க ஏற்பாடு செய்தது. தடையை மீறி நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் 1000 தோழர்கள் கைது.
2008 நவம்பர் 26 தூத்துக்குடியில் ஈழத்தமிழர் மீதான போரை நிறுத்தக்கோரி தலைமைச் செயற்குழு உறுப்பினர் பால்.பிரபாகரன் தலைமையில் கண்டனப் பேரணி. ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
2008 நவம்பர் 18 முதல் டிசம்பர் 1 வரை மருத்துவர் நா.எழிலன் தலைமையில் தமிழக மாணவர் கூட்டமைப்பு சார்பில் ஈழத்தமிழரைக் காக்கக் கோரியும். போரை நிறுத்தக் கோரியும் தமிழ்நாடு முழுவதும் 15 நாள் தொடர் பரப்புரைப் பயணம் மேற்கொள்ளப்பட்டது. தமிழ்நாடு முழுவதும் பெரியார் திராவிடர் கழகத் தோழர்கள் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து ஒருங்கிணைத்தனர். பயணத்தில் பெ.தி.க மாணவர்கள் பங்கேற்றனர்.
2008 டிசம்பர் 15 புதுச்சேரியில் பெ.தி.க, விடுதலைச்சிறுத்தைகள், மதிமுக, லோக்ஜன சக்தி, ஃபார்பர்டு ப்ளாக், தேசியவாத காங்கிரஸ் ஆகிய அமைப்புகள் இணைந்து ஈழத்தமிழரைக் காக்கக் கோரியும் போரை நிறுத்தக் கோரியும் வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜியைச் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். மத்திய அமைச்சர் ராம்விலாஸ்பாஸ்வான் மற்றும் சரத்பவார். பிஸ்வாஸ் ஆகியோரையும் சந்தித்து ஈழத்தமிழருக்கு ஆதரவு திரட்டினர்.
2008 டிசம்பர் 19 ஈரோட்டில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் இந்திய இறையாண்மைக்கு எதிராகப் பேசியதாக கழகத் தலைவர் கொளத்தூர் மணி, த.தே.பொ.க பொதுச்செயலாளர் மணியரசன், இயக்குநர் சீமான் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
2008 டிசம்பர் 20 கழகத் தலைவர் கொளத்தூர் மணி. பெ.மணியரசன். சீமான் ஆகியோரை விடுதலை செய்யக் கோரி தூத்துக்குடியில் கண்டன ஆர்ப்பாட்டம்.சென்னை சத்தியமூர்த்திபவன் அருகில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், ஞானசேகரன், தங்கபாலு கொடும்பாவிகள் எரிப்புசேலத்தில் பெண்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம்பழனியில் காங்கிரஸ்கட்சிக் கொடி பல்வேறு இடங்களில் எரித்து தொங்கவிடப்பட்டன. தோழர்கள் மருதமூர்த்தி, நல்லதம்பி உட்பட பல தோழர்கள் கைது.
2008 டிசம்பர் 21 கழகத் தலைவர் கொளத்தூர் மணி. பெ.மணியரசன். சீமான் ஆகியோரை விடுதலை செய்யக்கோரி ஈரோடு. ஏற்காடு, திருச்செந்தூர், குறும்பூர் ஆகிய இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டம்.
2008 டிசம்பர் 22 கழகத் தலைவர் கொளத்தூர் மணி. பெ.மணியரசன். சீமான் ஆகியோரை விடுதலை செய்யக் கோரி சேலம் மாவட்டம் கொளத்தூரில் கண்டனப் பேரணி ஆர்ப்பாட்டம், தங்கபாலு கொடும்பாவி எரிப்பு. 50 பெண்கள் 300 க்கும் மேற்பட்ட தோழர்கள் பங்கேற்பு. 60 தோழர்கள் கைது.
புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சிக்கு பாடைகட்டி, காங்கிரஸ் கொடியைச் செருப்பால் அடித்து ஊர்வலம் நடைபெற்றது.
2009 ஜனவரி 8 ஈழத்தில் போரை நிறுத்தக் கோரியும், இலங்கைக்கு ஆயுத உதவி செய்யும் இந்திய அரசைக் கண்டித்தும் சென்னைக்கு வருகை தந்த பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கருப்புக்கொடி காட்ட முயன்ற தோழர்கள் கைது செய்யப்பட்டனர். பெரியார் திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் கோவை.கு.இராமகிருட்டிணன் தலைமையில் சுமார் 700 தோழர்கள் கைது செய்யப்பட்டனர்.
2009 ஜனவரி 9 திருச்சியில் நீதிமன்ற வளாகத்தில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி. பெ.மணியரசன். சீமான் ஆகியோரை விடுதலை செய்யக்கோரி தமிழ்நாடு வழக்குரைஞர்கள் பேரவை சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
2009 ஜனவரி 18 கோவைக்கு வந்த இந்திய இராணுவ அமைச்சர் ஏ.கே.அந்தோணிக்கு தலைமைச்செயற்குழு உறுப்பினர் ஆறுச்சாமி தலைமையில் கருப்புக்கொடி காட்டிய பெ.தி.க தோழர்கள் கைது.
2009 ஜனவரி 20கழகத் தலைவர் கொளத்தூர் மணி. பெ.மணியரசன். சீமான் ஆகியோர் கோவை சிறையிலிருந்து விடுதலை. கோவையிலிருந்து மேட்டூர்வரை ஆயிரக்கணக் கான தோழர்கள் உற்சாக வரவேற்பு.
2009 ஜனவரி 21 தமிழ்நாடு முழுவதும் தமிழ்நாடு மாணவர் கழகம் சார்பில் தொடர் வகுப்புப் புறக்கணிப்புப் போராட்டம். மாநில அமைப்பாளர் பன்னீர்செல்வம் தலைமை யில் கோவை, திருப்பூர், பொள்ளாச்சி, உடுமலை, திண்டுக்கல், பழனி,சேலம், ஈரோடு ஆகிய நகரங்களில் மாணவர்கள் வகுப்புப் புறக்கணிப்புப் போராட்டத்தைத் தொடங்கினர்.
2009 ஜனவரி 31 சென்னையில் இலங்கை வங்கி தாக்கப்பட்டது. தலைமைச்செயற்குழு உறுப்பினர் கேசவன் உட்பட பல தோழர்கள் கைது.இலங்கைக்கு ஆயுதங்களை அனுப்பும் தஞ்சை விமானப்படை அலுவலகத்தை - விமான நிலையத்தை முற்றுகையிடும் போராட்டம் த.தே.பொ.க பொதுச் செயலாளர் மணியரசன், பெ.தி.க தலைவர் கொளத்தூர் மணி. ஆதித்தமிழர் பேரவை, தமிழர்கழகம் ஆகிய அமைப்புகளால் நடத்தப்பட்டது. சுமார் 250 தோழர்கள் கைது செய்யப்பட்டனர்.
2009 பிப்ரவரி 1 ஈழத்தமிழர் மீதான போரை நிறுத்தக் கோரியும் மாவீரன் முத்துக்குமாருக்கு வீரவணக்கம் செலுத்தும் வண்ணமும் கொளத்தூரில் கடை அடைப்பும் கண்டனப் பேரணியும் நடைபெற்றது.தூத்துக்குடியில் முத்துக்குமரன் வீரவணக்கப் பேரணி
2009 பிப்ரவரி 2 திண்டுக்கல்லில் சிங்கள அரசைக் கண்டித்து அனைத்துக்கல்லூரி மாணவர்களையும் திரட்டி மாபெரும் கண்டனப் பேரணி. வகுப்புகள் புறக்கணிப்புப் போராட்டம்.
2009 பிப்ரவரி 4 இலங்கைத்தமிழர்பாதுகாப்பு இயக்கம் அறிவித்த வேலை நிறுத்தப் போராட்டத்தில் முழுமூச்சுடன் செயல்பட்ட பெ.தி.க தோழர்கள் பேருந்து உடைப்பு, மத்திய அரசு அஞ்சல் அலுவலகம் எரிப்பு போன்ற கடுமையான குற்றங்களின் அடிப்படையிலான வழக்குகளில் திருப்பூர், கோவை தோழர்கள் கைது.

கொளத்தூரில் பொதுச்சொத்துக்களைச் சேதப்படுத்திய வழக்கில் ஈசுவரன், சசிக்குமார் உட்பட 13 தோழர்கள் கைது.
கொளத்தூர் விசு, குமார் ஆகிய இரு தோழர்கள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
2009 பிப்ரவரி 20 இலங்கைக்கு ஆயுத உதவி செய்யும் இந்தியாவைக் கண்டித்து இந்தியஅரசின் வருமானவரி அலுவலகங்களை இழுத்து மூடும் போராட்டம் தஞ்சை, மதுரை,ஈரோடு, புதுச்சேரி, சென்னை, கோவை சேலம் ஆகிய நரங்களில் நடைபெற்றது.
2009 பிப்ரவரி 22 முதல் 28 வரைசேலம் மாநகரில் ஈழத்தமிழர்களுக்கு உதவுங்கள் என்ற தலைப்பில் தொடர்கூட்டங்கள் நடைபெற்றன. கழகத் தலைவர் கொளத்தூர் மணி சிறப்புரையாற்றினார்.
2009 பிப்ரவரி 26 திண்டுக்கல்லில் ஈழப்போரைநிறுத்தக்கோரி நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கழகத்தலைவர் உரை. இராஜீவ்காந்தியை விடுதலைப்புலிகள் கொன்றிருந்தால் பாராட்டுவோம் எனப் பேசியதற்காக தேசியப் பாதுகாப்புசட்டத்தில் மார்ச் 2 ஆம் தேதி மீண்டும் கைது செய்யப்பட்டார்.
2009 பிப்ரவரி 28 தூத்துக்குடிக்கு வந்த வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜிக்கு கருப்புக்கொடி, அவரது படத்துக்கு செருப்படி ம.தி.மு.க பொதுச்செயலாளர் வை.கோ தலைமையில் பெ.தி.க தோழர்கள் கைது.
2009 மார்ச் 7 முதல் 16 வரை தமிழ்நாடு முழுவதும் தேசியப்பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்ட தோழர்கள் கொளத்தூர் மணி, இயக்குநர் சீமான், நாஞ்சில் சம்பத் ஆகியோரை விடுதலை செய்யக்கோரி கண்டன ஆர்ப்பாட்டங்கள்.
2009 மார்ச் 20 புதுவையில் தேசியப்பாதுகாப்புச்சட்டத்தில் கைது செய்யப்பட்ட தோழர்கள் கொளத்தூர் மணி, சீமான், நாஞ்சில் சம்பத் ஆகியோரை விடுதலை செய்யக்கோரி மாநிலத் தலைவர் லோகு.அய்யப்பன் தலைமையில் வாயில் கருப்புத்துணியைக் கட்டிக்கொண்டு கைவிலங்குடன் கண்டன ஆர்ப்பாட்டம்.
2009 மார்ச் 29 பெ தி க மாநில செயற்குழுவில் ஈழத்தமிழர் படுகொலைக்குக் காரணமான காங்கிரஸ் - திமுக கூட்டணியைத் தோற்கடிப்பீர் என தீர்மானம்.
2009 ஏப்ரல் 7 ஈழத்தில் தமிழர்களுக்கு எதிராக இரசாயன குண்டுகளையும், பாஸ்பரஸ் விசவாயுத் தாக்குதலையும் நடத்திவரும் சிங்கள - இந்திய அரசுகளைக் கண்டித்து கோவையில் பொதுச்செயலாளர் கோவை இராமகிருட்டிணன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம். சேலத்தில் மாவட்டச்செயலாளர் மார்டின் தலைமையிலும் புதுச்சேரியில் மாநிலத் தலைவர் லோகு.அய்யப்பன் தலைமையிலும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.
2009 ஏப்ரல் 12 இந்தியஇராணுவமே இலங்கையை விட்டு வெளியேறு என்ற முழக்கத்துடன் கோவையிலுள்ள இந்திய இராணுவ அலுவலக முற்றுகைப் போராட்டம். பொதுச்செயலாளர் கோவை.இராமகிருட்டிணன் தலைமையில் தமிழ்நாடு முழுவதிலிருந்தும் தோழர்கள் பங்கேற்பு. 400 தோழர்கள் கைது.
2009 ஏப்ரல் 14 முதல் 26 வரை 14 ஆத்தூரிலும், எப்ரல் 16 தூத்துக்குடியிலும், ஏப்ரல் 19 இளம்பிள்ளையிலும், ஏப்ரல் 26 நங்கவள்ளியிலும் ஈழத்தில் தமிழர்களுக்கு எதிராக இரசாயன குண்டுகளையும், பாஸ்பரஸ் விசவாயுத் தாக்குதலையும் நடத்திவரும் சிங்கள - இந்திய அரசுகளைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டங்கள் பேரணிகள் நடைபெற்றன.
2009 மே 2 கொச்சி துறைமுகம் வழியாக இலங்கைக்கு செல்ல இருந்த இராணுவ தளவாடங்கள் அடங்கிய இந்திய இராணுவ லாரிகள் கோவை நீலம்பூர் புறவழிச்சாலையில் பொதுச்செயலாளர் கோவை இராமகிருட்டிணன் தலைமையில் தடுத்து நிறுத்தப்பட்டன. பொதுமக்கள் இராணுவ வீரர்களையும், லாரிகளையும் தாக்கினர். ஈழத்தமிழர்களைக் கொல்லப் பயன்படுத்த இருந்த ஆயுதவண்டிகளைத் தடுத்ததற்காக பொதுச்செயலாளர் அவர்கள் மீதும், பெரம்பலூர் மாவட்டச்செயலாளர் இலட்சுமணன், ம.தி.மு.க மாணவரணி செயலாளர் சந்திரசேகர் மீதும் தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டனர்.
2009 மே 4 தேசியப்பாதுகாப்புச்சட்டத்தில் கைது செய்யப்பட்ட கழகத்தலைவர் விடுதலை செய்யப்பட்டார். கோவை தாக்குதலைக் காரணம்காட்டி தமிழகம் முழுவதும் முக்கியத்தோழர்கள் கைது வேட்டை.
2009 மே 5 தமிழ்நாட்டில் தேர்தல் பிரச்சாரம் செய்ய சோனியா காந்தி வருவதை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் உட்பல தமிழ்நாடு முழுதும் பல்வேறு ஊர்களில் தோழர்கள் கைது.
மேற்கண்ட பட்டியல் முழுமையானதல்ல. இன்னும் சில மாவட்டங்களின் செயல்பாடுகள் பற்றிய செய்திகள் கிடைக்கவில்லை. எனவே பட்டியலை முழுமையாக்க இயலவில்லை.
தேர்தலில் எதிரி காங்கிரசும் துரோகி தி.மு.க வும் தோற்கடிக்கப்பட வேண்டும் என்ற தீர்மானத்தை நிறைவேற்றி முழுவீச்சில் செயல்பாட்டில் இறங்கிய அனைத்து மாவட்டத் தோழர்களும் காவல்துறையால் மிரட்டப்பட்டனர். இனி என்ன செய்யப் போகிறோம் என்ற குறுந்தகட்டைத் தேடுகிறோம் என்ற பெயரில் தோழர்களின் வீடுகளில் அத்துமீறி நுழைந்து பெண்களை மிரட்டினர். கோவை கதிரவன், கோபி இளங்கோவன் ஆகிய தோழர்கள் கைது செய்யப்பட்டனர்.
மேட்டூர், கொளத்தூர். சென்னை இராயப்பேட்டை படிப்பகங்கள் கடுமையான சோதனைக்கு உட்படுத்தப்பட்டன. அனைத்து மாவட்டப் பொறுப்பாளர்களின் செயல்பாடுகளும் காவல்துறையின் கடுமையான கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டு குறுந்தகடு விநியோகம் கிட்டத்தட்ட தடைசெய்யப்பட்டது. மத்தியசென்னையில் தேர்தல் பிரச்சாரத்திற்குச் சென்ற இராயப்பேட்டை தோழர்கள் மீது பிணையில் வெளிவர இயலாத கடுமையான பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து கைது செய்யட்டனர். ஈழத்தமிழர் என்ற சொல்லையே பயன்படுத்தத் தடை போடப்பட்டது. இராயப்பேட்டை படிப்பகம் தி.மு.க காலிகளால் சூறையாடப்பட்டது. அங்கிருந்த பெரியார் சிலையும் சேதப்படுத்தப்பட்டது. பெரியார் சிலையை சேதப்படுத்திய காலிகளைக் கைதுசெய்யக் கோரி அப்பகுதி பொதுமக்களும் பெண்களும் காவல்நிலையத்தில் புகார் கொடுக்கச்சென்றபோது அந்தப் பெண்களும் தாக்கப்பட்டு கைது செய்யப்பட்டனர்.
தொடர்ச்சியாக 15 மாதங்களாக பெரியார்திக தோழர்கள் ஆர்ப்பாட்டம், போராட்டம், கருப்புக்கொடி, கொடும்பாவி எரிப்பு, கைது, சிறை, நீதிமன்றம் என ஒரே வட்டத்தில் சுற்றிச்சுற்றி வருகின்றனர். பெரும்பான்மையான தோழர்கள் தினசரி உழைத்தால்தான் வருமானம், சோறு என்ற நிலையில் வாழ்பவர்கள். துண்டறிக்கை அச்சிட்டு நடத்தப்படும் நிகழ்ச்சிகளுக்கு நிதிதிரட்ட முடியும். ஆனால் திடீர் திடீர் என தலைமையால் முறையாக அறிவிக்கக்கூட நேரமில்லாமல் நடத்தப்படும் போராட்டங்கள் அதனால் ஏற்படும் கைது நடவடிக்கைகள், சிறைப்படுதல் போன்றவைகள் தொடர்ந்து நடப்பதால் நிதிதிரட்டுவதும் இயலாத செயலாகப்போய்விட்டது.
தலைவர் சிறையிலிருந்து விடுதலையாகும் நாளில் பொதுச்செயலாளர் சிறைப்படுத்தப்படுகிறார். முக்கியத் தோழர்கள் கைது செய்யப்படுகிறார்கள். நிதி திரட்டலைக்கூட திட்டமிட்டுச் செய்ய காலஅவகாசம் கொடுக்காமல் அடுத்த கைது உடனே நடக்கிறது. அவ்வப்பகுதிகளில் உள்ள தோழர்கள் வட்டிக்கு கடன் வாங்கி சிறையில் உள்ள தோழர்களுக்கு தேவையானவற்றை வழங்குகின்றனர். ஆனால் சிறையில் உள்ள தோழர்களின் வருவாயை நம்பி வாழும் அவர்களது குடும்பத்தினர் நிலை இன்னும் மோசம். அவ்வாறு உள்ள குடும்பங்களுக்கு தேவையான உதவிகளைச் செய்யவும், சிறைப்பட்ட தோழர்களுக்கு தேவையானவற்றை உதவவும், தமிழகத்தின் முக்கிய நீதிமன்றங்கள் அனைத்திலும் நடக்கும் பெ.தி.க மீதான வழக்குகளைச் சந்திக்கவும் உங்களால் இயன்ற அளவு நிதி வழங்கி உதவுங்கள். எமது போராட்டத்திற்கு உங்களது பங்கைச் செலுத்துங்கள்.ஈழத் தமிழர் ஆதரவாளர்கள் மீது ‘இராணுவ வாகன’ தாக்குதல் நடத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் தேசியப் பாதுகாப்புச் சட்டம் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ள தோழர்கள் மீதான வழக்குகளை சந்திக்க பெரியார் திராவிடர் கழகம் வழக்கு நிதி திரட்ட முடிவு செய்துள்ளது.
நிதிக் குழுவினர்: வே. ஆறுச்சாமி, பொள்ளாச்சி இரா. மனோகரன், இல. அங்ககுமார், சு. துரைசாமி, வழக்கறிஞர் சாஜித், கோவை கோபால்.
வங்கி வழியாக வழக்கு நிதி செலுத்த விரும்புவோர் கீழ்க்கண்ட வங்கிக் கணக்குக்கு அனுப்பலாம்.
தா.செ.மணி, கணக்கு எண்: 555850503, இந்தியன் வங்கி, கொளத்தூர், swift code NO : IDIB 000KO43 சேலம் மாவட்டம்.
தொடர்புக்கு:
தா. கருமலையப்பன், ஒருங்கிணைப்பாளர், யாழ் தையலகம், வ.உ.சி. வீதி, உடுமலை - 642 126. கை பேசி: 9788324474 - பெரியார் திராவிடர் கழகம்

No comments:

Post a Comment